Search This Blog

Saturday, 11 July 2026

பள்ளிகளில் என்னென்ன நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது வழிகாட்டுதல்கள் வெளியீடு



பள்ளிகளில் என்னென்ன நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது வழிகாட்டுதல்கள் வெளியீடு






பள்ளிகளில் என்னென்ன நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்களை நடத்தக் கூடாது என்பது குறித்த வழிகாட்டுதல்களை பள்ளி கல்வி துறை வெளியிட்டுள்ளது.






இதை தலைமை ஆசிரியர்கள் எவ்வித சுணக்கமும் இன்றி பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.







இதுகுறித்து பள்ளி கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குனர் பூ.ஆ.நரேஷ், தனியார் பள்ளிகள் இயக்குனர் சுகன்யா ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:






தமிழக பள்ளி கல்வித் துறையின் கீழ் 57,671 பள்ளிகளில் 1,03,98,748 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 






இந்த மாணவர்கள் பல்வேறு சமூக பொருளாதார நிலைகளில் இருந்து பள்ளிக்கு வருகின்றனர்.







தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை விதிகளின்படி அரசியல், வகுப்புவாத, பிரிவினைவாத மற்றும் கல்வி நோக்கமற்ற நிகழ்ச்சிகள், கூட்டங்கள், பிரசாரங்கள் ஆகியவற்றை நடத்த பள்ளி வளாகத்தைப் பயன்படுத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








 மேலும், பள்ளிகளில் கல்வி சார்ந்த செயல்பாடுகள் மற்றும் கல்வி இணை செயல்பாடுகள் மட்டுமே நடத்துவதன் மூலம் மாணவர்களின் ஒட்டு மொத்த கல்வி வளர்ச்சியை உறுதி செய்ய இயலும்.









அரசியல் அடையாளங்களுடன்... ஆனால், பள்ளி கல்வியின் நோக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் அண்மைக்காலங்களில் பள்ளி வளாகத்தை ஜாதி, மத, அரசியல் ரீதியான அடையாளங்களுடன் சிலர் பயன்படுத்தி வருவதாகத் தெரியவருகிறது. 









இது மாணவர்களின் இளம் மனதில் அரசியல் சார்புகளை ஏற்படுத்தி பிரிவினையைத் தூண்டுவதாகவும், சில நேரங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்துவதாகவும் அதன் காரணமாக மன அழுத்தத்துக்கு உள்படுத்துவதாகவும் உள்ளது.









இதைக் கருத்தில்கொண்டு பின்வரும் செயல்பாடுகளை அனைத்து வகைப் பள்ளிகளிலும் தவறாமல் பின்பற்றுமாறு தெரிவிக்கப்படுகிறது.








பள்ளி வளாகங்களை கல்வி சாராத நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது.








வகுப்பறைகள், கலையரங்குகள், விளையாட்டு மைதானங்கள் அல்லது திறந்த வெளியில் மாணவர்களை ஒருங்கிணைத்தோ அல்லது வெளிநபர்களால் துறை சாராமல் நடத்தப்படும் ஒத்திகைகள், அணிவகுப்புகள் அல்லது வகுப்புவாதம் சார்ந்த செய்தியைப் பரப்புதல் மற்றும் விழா நடத்துதல் போன்றவை பள்ளி வளாகங்களில் கட்டாயம் அனுமதிக்கக்கூடாது.









பிறந்த நாள் விழா நடைமுறைகள்... அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் அறிவிக்கப்படும் தலைவர்களின் பிறந்த நாள் விழாக்களுக்கான நடைமுறைகளைத் தவிர பிற தலைவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ஏதும் பள்ளி வளாகத்தில் நடத்தவோ அல்லது அந்த விழாக்களுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லவோ பங்கு பெற அனுமதிக்கவோ கூடாது.









மேலும், இவை சார்ந்த விளையாட்டுப் போட்டிகள், மருத்துவ முகாம்கள், கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட எந்த விதமான நிகழ்ச்சிகளையும் எந்த வடிவத்திலும் பள்ளி வளாகத்தில் நடத்தக் கூடாது.








உணவுப் பொருள்கள், பரிசுப் பொருள்கள் வழங்குவதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். இந்த அறிவுரைகளை எவ்வித சுணக்கமும் இன்றி பின்பற்றுமாறு பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment