பள்ளிக் கல்வி - 2026-27 ஆம் கல்வியாண்டின் மன்றச் செயல்பாடுகள் - துவக்க நிகழ்ச்சி மற்றும் மாணவர்களிடையே மன்றச் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்குனரின் சுற்றறிக்கை
மாணவர்களின் கல்வி மற்றும் தனித்திறன் மேம்பாட்டில் மன்றச் செயல்பாடுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொணரவும், அவர்களின் பன்முக வளர்ச்சியை உறுதி செய்யவும் இந்த மன்றச் செயல்பாடுகள் ஒரு அடிப்படை தளமாக விளங்குகின்றன
அதன்படி, மன்றச் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை இதற்கென தனி பாடவேளை ஒதுக்கீடு செய்யப்பட்டு இச்செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே, இம்மன்றச் செயல்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளைகளில் வேறு எந்தவித செயல்பாடுகளுக்கும் இடமளிக்காமல், இச்செயல்பாடுகள் அனைத்தும் மகிழ்முற்றம் மாணவர் குழுக்கள் வாயிலாக நடைபெறுவதை உறுதி செய்தல் வேண்டும்.
மேலும், இந்த 2026-27 ஆம் கல்வியாண்டில், மன்றச் செயல்பாடுகளின் துவக்க நிகழ்ச்சியினை 28.07.2026 அன்று அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலை வணக்கக் கூட்டத்தின் போது நடத்திடத் தெரிவிக்கப்படுகிறது.
அதனடிப்படையில், இலக்கிய மன்றம், வினாடி-வினா மன்றம், சிறார் திரைப்பட மன்றம், கலை மற்றும் பண்பாட்டு மன்றம் (கலைத்திருவிழா) மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் போன்று பள்ளியளவில் செயல்படும் மன்றச் செயல்பாடுகளுக்கும் தனித்தனியாக ஒரு பொறுப்பாசிரியரையும், ஒவ்வொரு மன்றச் செயல்பாட்டிலும் சிறந்து விளங்கும் ஒரு மாணவரை அந்தந்த மன்றச் செயல்பாட்டிற்கான மாணவர் தூதுவராக (Student Ambassador) நியமித்தல் வேண்டும்.
மேலும், பின்வரும் நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றி ஆசிரியர்கள் மாணவர்களுடன் இணைந்து மன்றச் செயல்பாடுகளின் துவக்க நிகழ்ச்சியினை 28.07.2026 அன்று திட்டமிட்டு மேற்கொள்ளுதல் வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
மன்றச் செயல்பாடுகள் துவக்க நிகழ்ச்சி நிரல் - 28.07.2026
இந்நிகழ்ச்சிக்கு 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களையும் அவரவர் மகிழ்முற்றம் குழுக்களின் அடிப்படையில் 5 குழுக்களாக வரிசைப்படுத்தவும்.
இந்த துவக்க நிகழ்ச்சியினைத் தொடர்ந்து, அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அனைத்து மன்றங்களும் முறையாக அமைக்கப்பட்டு வாரந்தோறும் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பாடவேளைகளில் மன்றச் செயல்பாடுகள் முறையாகவும், தொடர்ச்சியாகவும் நடைபெறுவதை அந்தந்த பள்ளி தலைமையாசிரியரும் மன்றப் பொறுப்பாசிரியர்களும், மாணவர் அமைச்சர்களும், மகிழ்முற்றம் குழுத் தலைவர்களும் உறுதி செய்தல் வேண்டும்.
மேலும், இவ்வாறாக பள்ளிகளில் மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக முன்னெடுக்கப்படும் செயல்பாடுகள் அனைத்தும் மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கவும், எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் திறனைப் பெறவும் உறுதுணையாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
இவ்வகையான அனைத்து செயல்பாடுகளிலும் ஒவ்வொரு மாணவரின் பங்கேற்பினை உறுதிசெய்யும் நோக்கில் அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் திட்டமிட்டு இந்நிகழ்வுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து தலைமையாசிரியர்களும் மற்றும் ஆசிரியர்களும் இப்பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி, முழு கவனம் செலுத்தி, முனைப்புடன் செயல்படுத்தத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.